October 31, 2007

புலி பாய்வது எப்போது?

இந்தக் கேள்வி பெரும்பாலும் எல்லோரிடமும் இருக்கிறது. புலிசார்பாளர்களிடம் மட்டுமல்ல; புலியெதிர்ப்புத் தரப்பிலும் இதுதான் கேள்வி. சிங்களத்தரப்பிலும், ஏன் பிராந்தியத் தரப்பிலும் இதுவொரு முக்கிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.


புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் தகுந்த போரனுபவம் பெற எடுக்கும் காலமே 'களநிலைமையில்' வலிந்த தாக்குதலைத் தொடங்குவதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி.

புலி பதுங்குகிறது; இடையிடையே பாய்கிறது. இறுதியாக அனுராதபுரத்தில் பாய்ந்தது. அனால் இங்கு எல்லோரிடமுமுள்ள கேள்வி, புலி எப்போது இராணுவ நிலைகளைத் தாக்கி நிலமீட்புச் சமரை நடத்தப்போகிறது என்பதே.

நிலமீட்புச் சமரை நடத்துவதற்கான அரசியல், இராணுவக் களச்சூழல் இன்னும் கனியவில்லையென்றுதான் தோன்றுகிறது.

அதற்கு முன்னர் சற்றுப் பின்னோக்கிச் சென்று ஒரு மீள்பார்வை செய்வது நன்று.

இற்றைக்கு ஒன்றேகால் வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் கடந்த வருடம் ஆவணி 11 இல் புலிகள் முகமாலை, கிளாலி அச்சில் வலிந்த போர் தொடுப்பதற்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. அந்த வலிந்த சமர்வரை புலிகள் பக்கமே சாதகங்கள் அதிகமிருந்தன. புலிகளின் கையே ஒங்கியிருந்தது. முன்னாள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர்கூட 'புலிகள் மிகுந்த தேர்ச்சி பெற்ற வீர்களைக் கொண்டு, யுத்தத்தை எதிர்கொள்ளும் மனநிலையில் உள்ளபோதும் அரசபடையினர் தரப்பில் யுத்தத்தை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை' எனத் தெரிவித்திருந்தார். அந்த ஆவணிச்சமரின்பின் நிலைமை தலைகீழாக மாறியது உண்மை. அந்தத் தாக்குதல்முயற்சி மட்டும் புலிகள் நினைத்ததுபோல் நடந்திருந்தால் இன்று கிழக்கு முழுவதும் விடுபட்டிருக்காது, இராணுவ - அரசியல் சூழ்நிலைகளில் தமிழர் தரப்பின் நிலையே வேறாக இருந்திருக்கும்.

ஆனால் அவசர குடுக்கைத்தனமோ, அல்லது தம்மீதான அதீத நம்பிக்கையும் எதிரிமீதான குறைந்த மதிப்பீடுமோ, அச்சமர் தோல்வியில் முடிவடைந்ததோடு புலிகளைச் சடுதியாகப் பாதித்தது. ஏறத்தாழ 350 க்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டதோடு 800 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறிலங்கா இராணுவத்தரப்பிலும் இதேயளவு அல்லது இதைவிட அதிகளவு இழப்பு ஏற்பட்டபோதும், புலிகளுக்கு இது மாபெரும் பின்னடைவே. பெருந்தொகையில் போராளிகளை இழந்தும், பேரளவான ஆயுத வெடிபொருட்களைப் பயன்படுத்தியும் எதுவித சாதகமான பெறுபேறும் கிடைக்கவில்லை. எதிரியிடம் போராளிகளின் உடல்கள் விடுபடக்கூடாது என்பதற்காகவே பெரும் சண்டைகளைச் செய்தபோதும் அச்சமரில் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் எதிரியிடம் கைவிடப்பட்டமையானது சண்டையில் என்ன நடந்திருக்குமென்பதைக் காட்டுகிறது. தரையில் குறிப்பிடத்தக்க முறையில் எதுவும் நடக்காததால் புலிகளின் விமானப்படைபற்றிய உளவியல் யுத்தம்கூட பிசுபிசத்துப் போய் கேலிக்கூத்தானது.

ஆனால் அந்தச்சமர் புலிகளால் தொடங்கப்படும்வரை புலிகள் நினைத்ததுபோலவே எல்லாம் நடந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள்படை என்ற பெயரில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதல்கள் படையினரை பெரும் இக்கட்டுக்குள் மாட்டிவிட்டிருந்தது. ஆவணிச் சமர்வரை அந்தக் கிளைமோர்த் தாக்குதல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துமளவுக்கு இராணுவம் தயாராக இருக்கவில்லை. சமர் ஒன்று தொடங்கினால், வினியோகத் தொடரணிக்கு விழும் இரண்டொரு கிளைமோர்த் தாக்குதல்கள்கூட மொத்தச் சமர்க்களத்தையே மாற்றிவிடுமென்ற நிலையில், சிறிலங்காப் படைத்தரப்பு மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலேயே இருந்தது. இராணுவத்தினர் மேல் பெரியதொரு சமரைத் தொடுப்பதற்கு புலிகளுக்கு ஏதாவது சாட்டு தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். மாவிலாறில் சிறிலங்காப்படையினரின் வலிந்த தாக்குதல்வரை அவர்கள் நினைத்தபடி எல்லாம் நடந்தது. மூதூர்ப்பகுதி மீதான வலிந்த தாக்குதலை நடத்திக்காட்டினார்கள். சிறிலங்கா அரசபடையினரின் நிலைமை தப்பியோடு நிலையில்தான் அப்போதும் இருந்தது.

அதே துணிவில் யாழ்ப்பாணத்தின் மீதும் போர்தொடுத்தனர் புலிகள். ஆனால் நடந்ததோ வேறு. வழமையான புலிகளின் ஆயத்தப்படுத்தல்களின்றி இச்சமர் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. சரியான வேவுத்தரவுகள், நுழைவுப்பாதைகள் இன்றி தாம் ஒரு நாட்டு இராணுவம் என்ற நினைப்புடன் முழுக்க முழுக்க மரபுவழியில் புலிகள் சமரொன்றைத் தொடக்கினார்கள். அணிகள் எவையும் ஊடுருவி தாக்குதல் நடத்தவில்லை. இரவு நேர நகர்வுகளோ எதிரிமீதான திகைப்புத்தாக்குதல்களோ நடக்கவில்லை நேரடியாக கனரக ஆயுதங்கள்மூலம் காவலரண்களைத் தாக்கி முழுமையான மரபுவழிச்சமரொன்றைச் செய்தார்கள். எதிரியின் ஆட்லறி, வினியோகத் தளங்கள் மீதான தாக்குதலைச் சரிவரச் செய்யவில்லை.
அதேவேளை, எதிரிக்கு இது வாழ்வா சாவா நிலைமைதான். ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இராணுவத்துக்கு இதுதான் நிலைமை. தப்பியோட முடியாது. இதுவே வன்னியின் தென்முனையில் எங்காவது நடந்திருந்தால் இராணுவம் தொடக்கத்தில் கட்டாயம் தப்பியோடியிருக்கும். ஓயாத அலைகள் -3 வன்னிக் காட்டில் தொடங்கியபோது இராணுவம் ஓடிய ஓட்டமும், அது யாழ்ப்பாணப்பக்கம் திரும்பியபோது புலிகளுக்குக் கிடைத்த கடுமையான எதிர்ப்பையும் ஞாபகம் கொள்வது சிறந்தது.

ஆவணிச் சமரில் புலிகளின் தாக்குதல்கள் சரியான திட்டமிடலின்றி, சரியான ஒருங்கிணைப்பின்றி நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. விடுதலைப்புலிகளின் முக்கிய படையணிகளும் வீரர்களும் சமரின் தொடக்கத்தில் களத்தில் இறங்கவில்லை. முக்கிய சண்டைத்தளபதிகள் களத்தை வழிநடத்தவில்லை. வேறு ஏதாவது பெரிய திட்டம் வைத்திருந்திருப்பார்கள் (பெரிய தரையிறக்கமொன்று அல்லது மணலாற்றுப்பக்கத்தில் பெரிய பாய்ச்சலொன்று). ஆனால் முதற்கோணலே முற்றும்கோணலாகிப் போய்விட்டது.

சுமார் ஒருவாரம் வரை தொடர்ந்த கடும் சண்டையின்பின்னர் புலியணிகள் பழைய நிலைக்கே பின்வாங்கியதோடு சமர் ஓய்வுக்கு வந்தது. தாக்குதலணிகள் கடுமையாகச் சிதைவடைந்திருந்தன. அணிகளை ஒழுங்குபடுத்தி சீரமைப்பதற்குள் இராணுவம் முகாலையில் முன்னேற்றமுயற்சி மேற்கொண்டு புலிகள் காவலரண் தொகுதியொன்றைக் கைப்பற்றிக் கொண்டது. புலிகளும் மீளமுடியாத நிலையில் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வது பற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள. உண்மையில் புலிகளுக்கு தம்மை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. ஆனால் அரசதரப்பு இணங்கிவராமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்தது. பேச்சுக்குப் பலவீனமாகப் போகக்கூடாதென்ற மரபுக்கிணங்க ஹபரண சந்தியில் ஒரு வாகனக்குண்டுத்தாக்குதல் நடத்தி 120 கடற்படையினரைக் கொன்று, காலித் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி ஒரு வெற்றியைப் பெற்று பின்னர் பேச்சுக்குச் சென்றனர் புலிகள்.

ஆவணிச் சமரின் பின் புலிகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதுவரை செயற்பாடின்றி கலைக்கப்பட்டிருந்த விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியை மீளவும் லெப்.கேணல் அக்பரின் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய போராளிகளையும் இணைத்து படையணியைப் பலமாக்கினார்கள். அமைப்புக்கு ஆட்சேர்ப்பைத் தீவிரமாக்கினார்கள். யுத்தநிறுத்த காலத்தில் புலிகள் அமைப்பின் ஆட்சேர்ப்பு மிகக்குறைவாக இருந்த அதேநேரத்தில் நிறையப்பேர் அமைப்பிலிருந்து விலகிச் சென்றிருந்தார்களென்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆட்தொகை ரீதியில் புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் பலவீனப்பட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

இந்நிலையில் ஒக்ரோபர் 11 ஆம் நாள் சிறிலங்கா அரசபடைகள் முகமாலை முன்னரங்கின் வழியாக பெரியதொரு படைநடவடிக்கையைச் செய்தது. ஒருநாள் மட்டுமே நடந்த இச்சமரில் இராணுவம் பலத்த இழப்புக்களைச் சந்தித்தது. புலிகளுக்கு அது வாழ்வா சாவா சமர். நன்கு திட்டமிட்ட ரீதியில் அச்சமரைப் புலிகள் வெற்றி கொண்டனர். சில கவசவாகனங்களைத் தாக்கியழித்தனர். முறியடிப்புச் சமருக்கென பெயர்போன புலிகளின் தளபதி கேணல் தீபனின் தலைமையில் இவ்வெற்றி நிகழ்த்தப்பட்டது. அதற்கு மூன்றுநாட்களுக்கு முன்புதான் விக்ரர் கவச எதிர்ப்பணியின் தளபதி லெப்.கேணல் அக்பர் களத்தில் வீரச்சாவடைந்திருந்தார்.
அந்த முறியடிப்போடு புலிகள் தம்மை வடபோர் முனையில் நிலைநிறுத்தியதோடு முன்னர் இழந்த பகுதிகளையும் மீட்டுக்கொண்டனர்.
அன்றிலிருந்து ஒருவருட காலமாக வன்னியின் வடபோர்முனையில் இராணுவம் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச்சமரின் பின்னர்தான் புலிகள் தமது ஆட்பலப் பெருக்கத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு முறையைக் கொண்டுவந்தார்கள். இதுவரை ஆட்பல ரீதியில் பங்களிப்புச் செய்யாத குடும்பங்களில் வயதுவந்த ஒருவர் கட்டாயம் இயக்கத்தில் இணையவேண்டுமென்ற நடைமுறையை வன்னியில் நடைமுறைப்படுத்தினார்கள். மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்த முறைமூலம் தமது படைப்பலத்தை பெருமளவுக்குப் பெருக்கிக் கொண்டுள்ளார்கள் புலிகள்.

அதன்பின்னர் கிழக்கின் துயரம் தொடங்கியது. படிப்படியாக புலிகளின் முக்கிய இடங்களைப் பிடித்தது சிறிலங்கா இராணுவம். வாகரை விடுபட்டதோடு புலிகளுக்கிருந்த நம்பகமான வினியோகத் தொடர்பு அற்றுப்போனது. வாகரை கைவிடப்பட்டபின்னர் எந்தவொரு பெரிய சமரையும் புலிகளால் எதிர்கொள்ள முடியாது என்பது வெளிப்படை. அனாலும் கிழக்கை முழுதாகக் கைப்பற்ற எதிர்பார்த்ததைவிடவும் அதிககாலத்ததை இராணுவம் எடுத்துக்கொண்டது.
இது எதிர்பார்த்ததுதான். ஆனால் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் மாட்டுப்படுமென்பது எதிர்பார்க்காதது. சரியான முறையில் அவற்றைப் பதுக்காமல் விட்டமையால் நிறைய வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. கிழக்கில் தொடரப்போகும் கரந்தடிப் போர்முறைக்கு வன்னியிலிருந்து வழங்கல்கள் போய்ச்சேருவதிலுள்ள சிரமம் தற்போது அளப்பரியது. இந்நிலையில் வெடிபொருட்களைச் சரியாகப் பாதுகாத்திருக்க வேண்டியது முக்கியமானது. இறுதியாக அம்பாந்தோட்டையில் நடைபெற்ற வாகனத்தொடரணி மீதான தாக்குதல்கூட கிளைமோர் இன்றி வெறும் துப்பாக்கி ரவைகளால் நடத்தப்பட்டுள்ளதென்பதைக் குறிப்பிட வேண்டும். ஒரு கிளைமோராவது வைத்துத் தாக்குதல் நடத்தியிருந்தால் இன்னும் பெரியளவில் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

இனி தற்போதைய சூழ்நிலைக்கு வருவோம்.

புலிகள் தம்மீது பாயமுன்பு அவர்கள் மீது தாம் பாயவேண்டுமென சிறிலங்கா அரசபடைகள் திட்டமிட்டிருந்தன. பரீட்சார்த்த முயற்சியாக வவுனியா - மன்னார் முன்னரங்குகளில் மட்டுப்படுத்தப்பட்டளவில் சில நடவடிக்கைகளைச் செய்தன. அவையனைத்தையும் புலிகள் மிகக்கடுமையாக எதிர்த்து முறியடித்தனர். தற்போதைய நிலையில் சிறிய இராணுவத் தோல்வியும் தென்னிலங்கை அரசியிலில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதால், வெற்றி வராவிட்டாலும் பரவாயில்லை; தோல்வி வரக்கூடாது என்ற நிலையை சிங்கள ஆட்சியாளர்கள் எடுத்திருந்தனர். அதனால் வன்னிமீது பெரும் இராணுவநடவடிக்கையை இதுவரைத் தவிர்த்தே வந்துள்ளனர். ஆனால் புலிகளுக்கு ஓய்வுகொடுத்தால் அவர்கள் தமது அடுத்த பாய்ச்சலுக்கு அதைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவார்கள் என்ற எண்ணம் சிங்களத் தலைமைக்கு உண்டு. அது முற்றிலும் உண்மையும்கூட. அதனால் புலிகளுக்கு ஓய்வு கொடுக்கவிடாமல் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை இடைவிடாது செய்துகொண்டுள்ளனர். புலிகளைத் தொடர்ச்சியாக முன்னரங்க நிலைகளில் மினக்கெடுத்துவதில் இராணுவம் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு இதில் பாதகங்கள் அதிகமுள்ளபோதும் சாதகமும் உள்ளது. கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் ஐயாயிரம் வரையான புதிய உறுப்பினர்களைப் புலிகள் திரட்டியுள்ளார்கள். அவர்கள் ஓரளவுக்கு யுத்தசூழ்நிலைகளுக்குப் பழக்கப்பட்டால்தான் அவர்களை நம்பி பெரியதொரு யுத்தத்தை நடத்த முடியும். புலிகள் இயக்கம் ஒருபோதும் இப்பெருந்தொகையில் புதிய உறுப்பினர்களைத் திரட்டியதில்லை. யாழ்ப்பாண இடப்பெயர்வை அண்டிய நாட்களில் ஆயிரத்து ஐநூறு வரையானவர்கள் இணைந்தமைதான் அதிகபட்சமாக இருந்திருக்க முடியும்.
இப்போது அணித்தலைவர்கள் என்ற நிலையில்பார்த்தால் புலிகள் இயக்கத்தில் குறைபாடுண்டு. திடீரென ஐயாயிரம் பேருக்கான அணித்தலைவர்களைத் தயார்ப்படுத்தும் நிலையில் இயக்கம் இருக்க வாய்ப்பில்லை. யுத்தநிறுத்தகால நீண்ட இடைவெளியில் அணித்தலைவர்கள் பலர் விலத்தியமையும், ஏராளமானோர் திருமணம் புரிந்திருப்பதும் அணித்தலைவர்கள் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சியே. எனவே புதிய உறுப்பினர்கள் சண்டைச் சூழ்நிலைக்குப் பழக்கப்படவும் அவர்களுள் கீழ்மட்ட அணித்தலைவர்களையாவது அடையாளம் கண்டு உருவாக்கவும் சிறிது காலம் தேவை. அதேவேளை அது பெருஞ்சமர்களற்ற ஆனால் யுத்தசூழ்நிலையுடன் கூடிய காலமாகவும் தேவை. அவ்வகையில் தற்போது முன்னணிக் காப்பரண்களில் நடைபெறும் சிறுசிறு மோதல்கள் ஒருவகையில் புலிகளுக்குச் சாதகமே. இப்புதியவர்களில் இரண்டாயிரம் பேராவது குறைந்தது நாலைந்து மாதங்களாவது முன்னணிக் களத்தில் நின்ற அனுபவம் பெற்றிருப்பார்கள். ஆனால் இது போதாது என்றே தோன்றுகிறது. புதிதாக இணைந்தவர்களின் போரறிவும் அனுபவமும் திருப்தி தரும்வகையிலுள்ளதென்று புலிகள் கருதும்பட்சத்தில் நிலமீட்புச்சமரைத் தொடங்க ஏதுவான சூழ்நிலையொன்று உள்ளது. (ஆனால் போதுமானதென்று எனக்குத் தோன்றவில்லை.)

ஆனால் மறுவளத்தில் அணிகளை பின்தளத்தில் ஒருங்கிணைத்து மாதிரிப் பயிற்சிகள அளித்து பெரும் சமருக்குத் தயார்ப்படுத்த முடியாத நிலையை தற்போதைய நடவடிக்கைகள் புலிகளுக்கு ஏற்படுத்தியுள்ளமையானது ஒரு பிரதிகூலமே.

ஆனாலும் ஒன்றை நோக்க வேண்டும். ஓயாத அலைகள் -3 தாக்குதல் புலிகளால் தொடங்கப்பட்டபோது அனைத்து அணிகளும் எதிரியை எதிர்பார்த்துக் காப்பரணில் நின்றவைதாம். எந்தவிதமான மாதிரிப்
பயிற்சிகளும் பின்னணியில் நடத்தப்படவில்லை. சரியான திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்பணிகள் சரியான இடங்களுக்கு ஊடுருவியபின் காவலரணில் நின்ற படையணிகளைக் கொண்டே எதிரிமீதான தாக்குதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. அவ்வகையில், ஓயாத அலைகள் -3 தாக்குதலைத் தொடங்கிய லெப்.கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் ஒரு தொகுதியைத் தவிர வேறு தாக்குதலணிகளுக்கு அச்சமரைப் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை.

இன்றைய சூழ்நிலையும் அப்படித்தான். யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதலைத் தொடுப்பதாக இருந்தால்தான் பெரியளவில் மாதிரிப்பயிற்சிகள் தேவைப்படும். வன்னியின் தென்முனையில் எங்காவது தாக்குதல் தொடங்குவதாக இருந்தால் அணிகளைக் கொண்டு மாதிரிப்பயிற்சிகள் செய்யவேண்டிய தேவையில்லை. சரியான வேவுத்தகவல்கள் திரட்டப்பட்டு திட்டம் தீட்டப்பட்டு கரும்புலிகள் உட்பட சிறப்பு அணிகளை ஊடுருவவிட்டு, பின் களமுனையில் நிற்கும் தாக்குதலணிகளைக் கொண்டே சமரைச் செய்யலாம்.

தற்போது வன்னிக்களமுனையில் போர் உதவிப்படை வீரர் என்ற நிலையில் சில வீரச்சாவுகள் நிகழ்வதை வைத்துப் பார்க்கும்போது புலிகளின் படையணிகள் சில பின்தளத்துக்கு நகர்த்தப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது. அதேவேளை இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் நடக்கும் - இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியல்லாத தாக்குதற் சம்பவங்கள் வேறொன்றைச் சொல்கின்றன. இச்சம்பவங்களில் புலிகளின் இழப்புத் தொகை தொடர்பாக சிறிலங்கா அரசு வெளியிடும் எண்ணிக்கைகள் ஏமாற்றுவேலை என்பது உண்மை. அதேவேளை புலிகளின் வேவுநடவடிக்கைகள் இப்பகுதிகளில் நடப்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

மேலும் அனுராதபுர வான்படைத்தளம் மீதான தாக்குதலின் மூலம் சிங்களத்தலைமை திகைத்திருக்கிறது. வடபோர்முனையிலுள்ள இராணுவத்தினரின் மனோவலிமை சிறிதாவது ஆட்டம் கண்டிருக்குமென்பதும் உண்மை. மறுவளத்தில் புலிகளுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் இத்தாக்குதல் பெரும் உளப்பலத்தை அளித்துள்ளதென்பதும் உண்மை. யாழ்ப்பாண முன்னரங்கைப் போலவே வன்னியின் தென்முனையும் மிக இறுக்கமான முறையில் இராணுவத்தினரால் பாதுகாக்கப்படுகிறதென்ற மாயை கலைந்துள்ளது. அனுராதபுரத்தாக்குதலுக்கான வேவு நடவடிக்கைகளைச் செய்ததோடு அதற்கான அணிகளையும் வெடிபொருட்களையும் இந்தக் காப்பரண் வரிசைக்கூடாகவே புலிகள் நகர்த்தியுள்ளனர் என்ற சேதியும் இதனுள் உள்ளது. அவ்வகையில் நீண்டகால வேவுப்பணிகள் இக்காவலரண் வரிசைகள் ஊடாக நடந்துள்ளன.

ஆகவே இந்த மாரி காலமும், ஓரளவுக்குப் புதியபோராளிகள் அடிப்படையான போரறிவும் அனுபவும் பெற்றுள்ளதும் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கான சாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. அத்தோடு, மாரிகாலத்தை இராணுவரீதியில் சாதகமாக்க வேண்டுமென்ற குறிக்கேள் முக்கியமானதாக இருந்தால் புலிகளால் எந்த நேரமும் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற நிலையுள்ளது. ஆனாலும் வன்னியின் கடைசிக் கையிருப்பிலும் புலிகள் கைவைத்துவிட்டநிலையில் - இனிமேல் புதிதாக மக்கள் வாழிடங்களைக் கைப்பற்றினாலொழிய ஆட்பலத்தைத் திரட்ட முடியாது என்றநிலையில் - கண்மூடித்தனமாக புலிகள் செயலில் இறங்கமாட்டார்கள் என்பதை நம்பலாம். குறைந்தளவு இழப்போடு வெற்றி உறுதி என்று தெரியும்பட்சத்தில்தான் புலிகள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.

களநிலையில் புலிகளின் வலிந்த தாக்குதலைப் பிற்போடும் ஓரம்சம் புலிகளின் ஆயுத வழங்கல்களே. அண்மைக்காலத்தில் சர்வதேசக்கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் சில அழிக்கப்பட்டுள்ளமை உண்மையே. அனால் சிறிலங்கா அரசு சொல்வதைப்போல புலிகளின் ஒட்டுமொத்த ஆயுதக்கப்பல்களையும் அழித்துவிட்டோமென்று சொல்வது சிங்களம் தனக்குத்தானே முதுகுசொறியும் வேலைதான். இன்னும்சில வாரங்களில் இன்னொரு கப்பலையும் அழித்துவிட்டோமென்று அறிக்கைவிடத்தான் போகிறார்கள்.
இந்த ஆழ்கடல் நடவடிக்கைகள் புலிகளின் ஆயுத வழங்கல்களுக்குப் பின்னடைவே. ஆனால் அது எவ்வளவுதூரம் அவர்களைப் பாத்தித்தது என்பதை வரும் காலம் சொல்லும். வேறு வழங்கல்கள் கிடைக்காதவிடத்து புலிகளால் தற்போது பெரியதொரு நிலமீட்புச் சமரைச் செய்ய முடியாது. அவர்களுக்கான வழங்கல் காலந்தாழ்த்தியாவது கிடைக்குமென்பது உறுதியே. அதேவேளை கடல்வழி ஆயுத வினியோகம சரிவராது என்ற பட்சத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதக்களங்சியங்களைக் கைப்பற்றியே ஆகவேண்டுமென்ற நிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை.
ஆனால் களநிலைவரத்தை வைத்துப்பார்க்கும்போது புலிகள் பெரியளவில் வெடிப்பொருள் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளதாகத் தெரியவில்லை.

மறுவளத்தில் அரசியற்களத்தில் நிலைமை வேறுமாதிரி இருப்பதாகப்படுகிறது. நிலமீட்புத் தாக்குதலை நடத்துவதைவிட பொறுமையாக இருப்பது சிறந்தது எனக் கருதுமளவுக்குச் சில விடயங்கள் உள்ளன.

அவைபற்றிப் பிறகு பார்ப்போம்.

Labels: , ,

October 29, 2007

எல்லாளன் நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகளால் 'எல்லாளன் நடவடிக்கை' எனப் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் நடந்து ஒருவாரம் கடந்துவிட்டது. இன்னமும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. இப்போதைக்கு அடங்கப்போவதுமில்லை. மிகமிக முக்கியமானதொரு காலகட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஈழப்போராட்டத்தின் தேக்கநிலையை உடைத்தெறிந்த முக்கியமானதொரு சம்பவம் இதுதான்.

1.
பொருளாதார ரீதியில் பார்த்தால் சிறிலங்கா அரசுக்குப் பெருமிழப்பை ஏற்பத்திய தாக்குதல் வரிசையில் இரண்டாம் இடத்தில் இப்படை நடவடிக்கை வரும். ஜூலை 24, 2001 இல் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலிலேயே அதிகபட்ச பொருளாதார இழப்பை சிறிலங்கா அரசு சந்தித்திருந்தது.
மாறாக விமானப்படையினருக்கு ஏற்பட்ட இழப்பு எனப்பார்த்தால், கட்டுநாயக்கா மீதான தாக்குதலும் எல்லாளன் படைநடவடிக்கையும் கிட்டத்தட்ட ஒரேயளவான பரிணாமத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் காலம், இடம் என்பவற்றைப் பொறுத்து இவையிரண்டும் வேறுபடுகின்றன.

2.
புலிகள் தரப்பில் அதிகபட்சமான கரும்புலிகள் ஒரேதாக்குதலில் பலியான சம்பவம் எல்லாளன் படைநடவடிக்கைதான். இதுவரை 13 கரும்புலிகளே அதிகபட்சமாக ஒருநடவடிக்கையில் வீரச்சாவடைந்துள்ளனர்.
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் 'தவளை நடவடிக்கைக்கு ஆதரவாக பலாலி விமானப்படைத்தளம் மீது '11.11.1993 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

01.02.1998 அன்று கிளிநொச்சிப் படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆனையிறவுத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் கிளிநொச்சி மீதான வாகனக் கரும்புலித் தாக்குதலிலும் லெப்.கேணல் சுபேசன் உட்பட மொத்தமாக 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

அதற்கு அடுத்தபடியாக அதிக கரும்புலிகள் வீரச்சாவடைந்த சம்பவம் 29.10.1995 அன்று சூரியக்கதிர் நடவடிக்கைப் படையினருக்கு எதிராக அளவெட்டிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

இம்மூன்று தாக்குதல்களுமே தாக்குதல் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முற்றுமுழுதாகத் தோல்வியில் முடிவடைந்தவை.
இவற்றையெல்லாம் கடந்து அதிகபட்சமாக 21 கரும்புலிகள் ஒரே தாக்குதலில் வீரச்சாவடைந்த சம்பவம் 'எல்லாளன் நடவடிக்கை' ஆகும். ஆனால் இங்கு நோக்கம் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.
தற்கு முன்பு இதேயளவில் கரும்புலிகள் நடவடிக்கைக்குச் சென்றிருந்தாலும், பலர் திரும்பி வந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கிளிநொச்சித் தாக்குதலுக்கு உறுதுணையாக ஆனையிறவுக்குச் சென்ற அணியினரில் சிலர் திரும்பி வந்திருந்தார்கள். 'ஓயாத அலைகள் -3' வன்னியில் தொடங்கியபோது பெருமளவில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலிகள் இழப்புக்கள் ஏதுமின்றித் திரும்பி வந்திருந்தார்கள். பளையிலிருந்த ஆட்லறித் தளத்தை அழிப்பதற்கென 11 பேர் கொண்ட கரும்புலியணி சென்றிருந்தது. வெற்றிகரமாக 11 ஆட்லறிகளைத் தகர்த்தபோதும் இருவர் மட்டுமே களத்தில் இறக்க, மிகுதி ஒன்பதுபேரும் திரும்பி வந்திருந்தனர்.

ஆனால் எல்லாளன் படைநடவடிக்கையில் எவரும் திரும்பிவருவதில்லையென முன்பே முடிபு செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இறக்கும்வரை சண்டைசெய்வதாகவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. (தற்போது சில 'ஆய்வாளர்கள்' கூறுகிறார்கள், சிலர் தப்பி வந்திருப்பதாக. அதற்கான சாத்தியங்களுள்ளன. ஆனால் அவர்கள் தாக்குதலணியுடன் சென்று வழியனுப்பிய வீரர்களாகவும், வேவு வழிகாட்டிகளாகவுமே இருப்பர். தளத்தினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் திரும்பவில்லையென்பதை உறுதியாகக் கூறலாம்.)

21 பேரைக் கொண்ட தாக்குதலணியை அனுப்புமளவுக்கு இலக்கு மிக முக்கியமானதே. படையிருடன் சண்டைசெய்து இடங்களைக் கைப்பற்றுவதோடு, தொடர்ந்தும் சண்டைசெய்தபடியேதான் விமானங்களைத் தேடித்தேடி அழிக்க வேண்டிய தேவையுமுள்ளது. திட்டமிட்டபடி தாக்குதலணிகள் சரியான இடங்களுக்கு ஊடுருவ முன்னரே எதிரி சண்டையைத் தொடங்கினாலும்கூட எப்படியாவது அவற்றை முறியடித்து இலக்குகள் அழிக்கப்பட வேண்டும். எனவே ஆட்தொகை என்பது இங்கு அதிகமாகத் தேவைப்பட்டுள்ளது.

ஆனால் திரும்பி வருவது பற்றி யோசிக்காமைக்கு இலக்கின் அமைவிடத்தைவிட தற்போதைய களநிலைவரம் தான் முக்கிய காரணம். அமைவிடத்தைப் பொறுத்தவரை, அது வன்னியின் கட்டளைப் பணியகத்திலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள பகுதி. புலிகளின் தென்முனைக் காவலரண் வரிசையிலிருந்து குறுக்காகக் பார்த்தாற்கூட65 அல்லது 70 கிலோமீற்றர்கள் வரை வரும். நகர்வுப் பாதையென்று பார்த்தால் 100 கிலோமீற்றர்கள் வரை வரலாம். ஆனால் இத்தூரமென்பது புலிகளுக்கு இயலாத காரியமன்று. மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை நூற்றுக்கணக்கான புலிகள் பலதடவை நடந்த வரலாறுண்டு. அனுராதபுரத்தில் தாக்குதல் நடத்திய அணிகூட நடந்தேதான் இலக்கை அடைந்தார்கள். எனவே விடிவதற்குள் காட்டுக்குள் புகுந்துகொண்டால் வன்னி வந்துசேர்வது முடியக்கூடிய காரியமே.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, தப்பிவரவேண்டுமானால் வெளிச்சம் வரமுன்பு தளத்தை விட்டு வேளியேறிவிட வேண்டுமென்பது. தாக்குதல் தொடங்கியபின் குறிப்பிட்ட நேரத்துக்குள் முகாமைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு இருக்கும். எனவே தப்பிவருவோர் அந்தச் சுற்றில் சண்டையொன்றை எதிர்கொள்ள நேரிடலாம்.

அடுத்து, தற்போதைய களநிலைவரத்தைக் கவனத்திற் கொண்டால், பெரிய வெற்றியொன்றை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் புலிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகும். அரைகுறையாக இன்றி முழுமையான வெற்றியொன்றை உறுதிப்படுத்த வேண்டும். அண்மைக்காலமாக இராணுவ நோக்கில் ஏற்பட்ட பின்னடைவுகள் மத்தியில் மேலும் ஓர் அரைகுறைத் தாக்குலொன்றை நடத்தி முடிக்க புலிகள் விரும்பவில்லை. மேலும் மிகநீண்டகாலமாகத் தயாரிக்கப்பட்ட, அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஓர் இலக்கை முற்றுமுழுதாக அழிக்க வேண்டிய தேவையுமிருந்தது. தாக்குதல் தொடர்பாக திரு. வே. பிரபாகரன் வெளியிட்டதாக வெளிவந்த கருத்துக்கள் இதனைத் தெளிவாக உணர்த்தும். அத்தோடு இத்தாக்குதலை தலைமை தாங்கிய லெப்.கேணல் இளங்கோவும், லெப்.கேணல் வீமனும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாகக் கடைமையாற்றியவர்கள். தமது நேசிப்புக்கும் நம்பிக்கைக்குமுரிய இருவரை இத்தாக்குதலுக்கென பிரபாரகன் தெரிவு செய்து அனுப்பியிருந்தார். மீளமுடியாத ஓர் இக்கட்டடில் இருந்த போராட்டத்தில் மிகப்பெரும் தடைநீக்கியாக இத்தாக்குதல் விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இனி ஒருபோதும் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கப் போவதில்லை. எனவே பங்குபற்றும் அணியினர் திரும்பி வருவது பற்றிய கவலையின்றி இயலுமானவரை முற்றுழுதாக முகாமைத் தகர்ப்பதென்பதே குறியாய் இருந்தது.

4.
ந்தத் தாக்குதலை ஒரு கூட்டுப்படை நடவடிக்கையாக புலிகள் அறிவித்ததோடு அதை நடத்திக்காட்டியிருக்கிறார்கள். புலிகளின் விமானப்படை சில குண்டுகளை வீசியிருக்கிறது. ஆனால் புலிகளின் விமானப்படை சண்டைக்களத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையென்பதே உண்மை. வவுனியாவிலிருந்து புறப்பட்ட உலங்குவானூர்தியொன்று வீழ்ந்து நொருங்கக் காரணமாக இருந்ததொன்றே தமிழீழ விமானப்படையின் 'எல்லாளன் படைநடவடிக்கை' யின் நேரடிப் பங்களிப்பு.
உண்மையில் இத்தாக்குதலுக்கு விமானப்படையைப் பயன்படுத்தியிருக்க வேண்டிய தேவை புலிகளின் விமானங்கள் "களத்துக்கு வந்த நேரத்தில்" இருக்கவில்லை.

ஆனால் இந்த விமானத்தாக்குலானது கருத்துலகில் மிக்பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. குண்டுவீச வேண்டிய இலக்கில் தமது பாதுகாப்பு முற்றாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் புலிகள் தமது விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதைவிட்டால் இன்னொரு அருமையான சந்தர்ப்பம் கிடைப்பது கடினமே. புலிகளின் விமானப்படைத்திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருதுகோள் பெருமளவானோரிடம் ஏற்பட்டுள்ள நிலையில், தாம் இன்னும் இயங்குதிறனுடன் உள்ளோம் எனக் காட்ட வேண்டிய தேவையும் புலிகளுக்கு இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உண்மையில் தரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் மட்டுமே சிறிலங்காப் படையினருக்குச் சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் பன்னாட்டு ஊடகங்களில் புலிகளின் விமானப்படையின் குண்டுவீச்சே முதன்மைப் படுத்தப்பட்டது. தாக்குதல் தொடங்கியபின் பன்னாட்டுச் செய்திநிறுவனங்கள் வெளியிட்ட முதற்கட்டச் செய்தியில் புலிகளின் விமானப்படை தாக்குதல் நடத்துவதாகவே செய்திகள் வெளியிட்டன. புலிகளின் விமானப்படை குறித்த ஆச்சரியமே முதன்மைப்படுத்தப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்ட விமர்சனங்களும் பெரும்பான்மையானவை புலிகளின் விமான்ப்படை பற்றியதாகவே இருந்தன.

நேரடியாக தாக்குதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் தமது விமானப்படை மூலம் கருத்துலகில் மிகப்பெரிய மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளனர் புலிகள்.

5.
த்தாக்குதல் இடம்பெற்ற காலம் மிக முக்கியமானது. சிறிலங்கா அரசு புலிகளை பலவீனப்படுத்திவிட்டதாகவும், இன்னும் சிலமாதங்களில் அவர்களின் கதை முடிகிறது என்றும் கதைவிட்டுக்கொண்டிருந்த காலத்தில் இது நடந்துள்ளது. ஆனால் இதுதான் காலம் தொடர்பான முக்கிய காரணி என்றில்லை.
வேறுவகையில் இத்தாக்குலின் காலம் முதன்மை பெறுகிறது.
வன்னிமீதான சிறிலங்காப் படைகளின் பெரும் படையெடுப்பொன்றை சிலமாதங்களுக்கு ஒத்திவைத்திருப்பதே இத்தாக்குதலின் காலம் தொடர்பான முக்கிய கூறு.

சிறிலங்காப் படைகளின் முன்னேற்ற முயற்சிப்புக்களும் அவற்றுக்கெதிரான புலிகளின் தற்காப்புத் தாக்குதல்களும் விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் பாதகமானவை. தமது வலு முழுவதையும் தற்காப்புத் தாக்குதல்களிலேயே செலவிட வேண்டியநிலை நிச்சயம் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் பாதகமான விடயம். அதைத் தெரிந்தே புலிகளுக்கு ஓய்வு கொடுக்கவிடாமல் சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளன.
தமது மனித வளத்தையும், ஆயுத பலத்தையும் எதிரியின் முன்னேற்ற முயற்சியை முறியடிப்பதில் செலவிட்டுக்கொண்டிருந்தால், நிலமீட்பு என்ற முயற்சியைச் செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையா இருக்கும். அதுவும் தற்போது சர்வதேசக் கடற்பரப்பில் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னவடைவுகள் களநிலைமையை இன்னும் பாதித்துள்ளது.
தற்போதைய நிலையில் எதிரியின் பாரிய முன்னெடுப்புக்களை முற்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டிய தேவை புலிகளுக்கு அவசரமாக உள்ளது.
'எல்லாளன் படைநடவடிக்கை' அதைச் செவ்வனே செய்துள்ளது.
ஆங்காங்கே வழமையாக படையினர் செய்யும் சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை விடுத்து வன்னிமீது பெருமெடுப்பில் ஒரு கூட்டுப்படைநடவடிக்கையை சிறிலங்கா அரசு உடனடியாகச் செய்ய வாய்ப்பில்லை.

இராணுவத்தின் பெரிய முன்னேற்ற நடவடிக்கைகள் அற்றதான ஒரு காலப்பபகுதியைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக்காலப்பகுதி விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குரிய தாயர்ப்படுத்தற் காலப்பகுதி. இதை எதிரியும் நன்கு உணர்ந்துள்ளான். புலிகளுக்குக் கொடுக்கும் காலஅவகாசம் தமக்குரிய மிகப்பெரிய ஆபத்தென்பதால் அதை எப்பாடு பட்டாவது முறியடிக்க சிறிலங்கா இராணுவமும் அவர்களின் தலைமையும் முயலும்.

சரியான தயார்ப்படுத்தலின்றி அவசரஅவசரமாக படைநடவடிக்கையை சிறிலங்கா அரசு தொடங்கலாம். ஆனால் அப்படி நடந்தால் மிகக்கடுமையான இழப்பை சிங்களப்படைகள் சந்திக்குமென்பது வெளிப்படை.
மகிந்த அரசாங்கம் கட்டிவைத்திருக்கும் மாயை விரைவில் கலையும் காலம் வரும். எந்தவொரு தோல்வியும் தாம் கட்டிவைத்திருக்கும் மாயையை உடைத்துவிடும் என்ற காரணத்தால்தான் இவ்வளவுகாலமும் வன்னிமீதான தமது நடவடிக்கையை மகிந்த சகோதரர்கள் தள்ளிப்போட்டு வந்தனர்.
தலைக்கு மேல வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன என்ற கணக்காக 'அனுராதபுரமே போட்டுதாம், இனியென்ன?' என்ற சலிப்போடு, சிலவேளை மோட்டுத்தனமான முயற்சியொன்றில் மகிந்த சகோதரர்கள் இறங்கக்கூடும்.

October 17, 2006

உலகம் கோமாளிகளின் கையில்

எங்கயடா இன்னும் ஒருத்தனும் கண்டிக்கக் காணேல எண்டு ஆச்சரியத்தோட காத்திருந்தன்.
அதுக்கு முடிவுகட்டி அமெரிக்காவும் ஐநாவும் கண்டன அறிக்கை விட்டிருக்கினம்.

நேற்று திங்கட்கிழமை (16.10.2006) அன்று சிறிலங்காவில் ஹபரணை என்ற இடத்தில் சிங்களக் கடற்படை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூறு கடற்படையினர் வரை கொல்லப்பட்ட சம்பவத்துக்குத்தான் கண்டிக்கினமாம்.
இதில் கண்டிக்க என்ன இருக்கு என்று கண்டித்தவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? எல்லாம் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் அறிக்கையில் சம்பவத்தை மட்டும் செருகி அறிக்கை வெளியிடுவதுதான் இவர்கள் வேலை.

இத்தாக்குதலில் என்ன தவறு?, இதைச் செய்வதற்கு இருக்கும் தடை என்ன? இதில் கண்டிக்க என்ன இருக்கு? போன்ற கேள்விகளைக் கேட்டால் விளக்கம் தர சம்பந்தப்பட்ட 'கண்டிப்பாளர்கள்' முன்வரப்போவதில்லை.

பல பத்துத் தடவைகள் பறப்புக்கள் மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான குண்டுகளைத் தமிழர்மேல் பொழிந்து, பொதுமக்களிலேயே நூற்றுக்குமதிகமானவர்களைக் கொன்று குவித்துள்ளது சிறிலங்கா அரசு. பல கோடி ரூபாக்கள் பெறுமதியான தமிழரின் சொத்துக்களை நாசமாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்துள்ளது.
இதைவிட வலிந்த நில ஆக்கிரமிப்புக்களை நடத்தியுள்ளது.
இவ்வளவும் சமாதானப் பேச்சுவார்த்தை என்று பூச்சாண்டிகாட்டிக்கொண்டுதான்.

போர்க்களத்தைத் தாண்டிய அரசபயங்கரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், சிறிலங்கா அரசபடைமீது நடத்தப்பட்ட இராணுவத்தாக்குதலுக்கு கண்டன அறிக்கை விடுவது எவ்வளவு வேடிக்கை? இதிலென்ன பயங்கரவாதத்தைக் கண்டார்கள்?
ஹபரணை மட்டுமன்றி இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தும் 'தார்மீக நியாயத்தை'ப் புலிகள் பெற்றுள்ளார்கள். இதை எந்தக் கொம்பனும் அல்லது கோமாளியும் மறுக்க முடியாது. அரசவான்படையின் தாக்குதல்களை ஏற்றுக்கொண்ட எவனுக்கும் இப்படியான தாக்குதல்களைக் கண்டிக்க துளியும் அருகதையில்லை. அதுவும் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதலைக் கண்டிக்க எள்ளளவும் அருகதையில்லை.
இதில் எந்தப் பயங்கரவாதமுமில்லை.

இராணுவ இலக்குகள் தாக்கப்படும்போது ஏன் இந்தக் கோமாளிகள் துள்ளுகிறார்கள் என்று புரியவில்லை.
ஐநா சபையின் செயலாளர் நாயகம்கூட இந்தக்கோமாளிக்கும்பலின் முதன்மையாள் என்பது உறைக்கும் உண்மை.

இந்தக் கோமாளிகளின் கையில் உலகம்.
இவர்கள் வரிசையில் ஹபரணைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்னும் சில கோமாளிகள் பட்டியலில் இணைவார்கள் என்று நம்புவோமாக.

September 05, 2006

சம்பூரும் தமிழர் போராட்டமும்

இன்று அரசியலிலும் போரியலிலும் சம்பூர் என்ற சொல் உணர்த்துவது அச்சிறிய கிராமத்தையன்று.
மாறாக அதைச்சுற்றியுள்ள ஒரு தொகுதிக்கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை.
முன்பு இதே பகுதிகள் மூதூர் என்ற சொல்லினூடகக் குறிக்கப்பட்டன. வடபகுதியில், மூதூரின் ஒருபகுதி படையினரிடமும் மறுபகுதி புலிகளிடமும் இருப்பதாகவே எண்ணப்பட்டது. புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை அழைத்தது 'மூதூர் கோட்டம்' என்ற பேரால்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின்தான் சம்பூர் என்ற பேர் பிரபலமாகத் தொடங்கியது. தொடக்கத்தில் பலர் மூதூரும் சம்பூரும் வெவ்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்றே நினைத்தனர். அரசியல் ரீதியில் சம்பூர் பிரபலமாகத்தொடங்கியது. அது முற்றி இராணுவ ரீதியிலும் பிரபலமாகத் தொடங்கியது. 'குரங்குப் பாஞ்சான்' என்ற இடத்தின் பிரச்சினை ஓரளவு அமுங்கிப் போனபோது சம்பூரின் பெயரில் சர்ச்சை முளைத்தது. சம்பூரில் புலிகள் விமானத்தளம் அமைக்கிறார்கள் என்றளவில் சர்ச்சை தொடங்கியதுடன் அப்பகுதிக்கான பொருளாதாரத் தடை அரசாங்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின் இவ்வாண்டின் தொடக்கத்தில் இச்சர்ச்சைகள் கூர்மையுற்றன. ஏப்ரல் இறுதியில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலைத் தொடர்ந்து சம்பூர்ப்பகுதி மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆவணி மாதம் திருகோணமலைத் துறைமுகம் மீது புலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்தியதோடு இப்பகுதி முழு முக்கியத்துவம் பெற்றது. அன்றிலிருந்து சம்பூரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்று சிங்களத்தரப்பு கர்சித்து வந்தது.

சம்பூரைக் கைப்பற்ற முழு அளவில் இராணுவத் தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் தொடங்கியது. அது தொடங்கியபோது அத்தாக்குதலின் நோக்கம் பற்றி முரண்பாடான தகவல்கள் அரசிடமிருந்து வெளிவந்தன. ஒருவர், இது சம்பூரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாகச் சொல்ல, மற்றொருவர் அப்படியி்ல்லை என்று மறுத்தார்.
ஆனால் அப்போதே நோக்கம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது.

ஒரு வாரகால சண்டைக்குப்பின் இப்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. சம்பூர்க்கிராமம் முற்றாகப் பறிபோனதா இல்லையா என்பது தெரியாவிட்டாலும் சம்பூர் என்ற சொல் எதைக் குறித்ததோ அது மட்டில் படையினர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் திருமலைத் துறைமுகத்துக்கான ஆபத்து தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. அதுகூட முற்றிலும் என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக புலிகள் சம்பூரில் பயன்படுத்தியது 122 mm,152 mm, 85 mm என்பவற்றில் ஏதாவதொரு ஆட்லறியாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஆனால் திருமலையில் 130 mm ஆட்லறியைப் புலிகள் நிலைப்படுத்தியிருந்தால் திருமலைத் துறைமுகம் இன்னும் எறிகணை வீச்செல்லைக்குள்தான் இருக்கும். ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைந்தளவே உள்ளது.

சம்பூர் என்பது இன்றைய நிலையில் மிக முக்கிய கேந்திர முக்கியத்துவமான இடமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த இழப்பு தமிழர் தரப்புக்கு ஈடு செய்யமுடியாததுதான்.
ஆனால் புலிகள் ஓடி ஒழிந்துவிட்டார்கள், அவர்கள் கதை முடியப்போகிறது, இனி முல்லைத்தீவுதான் அடுத்த இலக்கு, அதையும் இழக்கப்போகிறார்கள் என்று கதை விட்டுக் கொண்டிருப்பது அதீதமாகவே படுகிறது. சொல்லப்போனால் தங்கள் மனவிருப்பத்தை இப்படிச் சொல்வதாக நினைக்கலாம்.
சுனாமி தாக்கியபோது இரண்டாயிரம் புலிகள் அழிந்தார்கள் என்று தாங்களே செய்தியை உருவாக்கிப் பரப்பித் திரிந்ததுபோல்தான் இதுவும் தோன்றுகிறது.

முழு யுத்தக்காலமொன்றில் இப்படிப் பின்வாங்க நேர்ந்தால் சந்தேகமில்லாமல் அது புலியின் இயலாத்தன்மை என்று சொல்லலாம். ஆனால் இது அப்படியன்று. ஒருதரப்பின் கைகளைக் கட்டிவைத்துக் கொண்டு மறுதரப்பை அடிக்க விட்டுவிட்டு 'ஆகா இவன் தோற்றுவிட்டான' என்று சொல்வதற்குச் சமன்.
புலிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று சொன்னால் இங்கு எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது தெரியும்.
அனால் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மூதூர் இராணுவ முகாம்களைத் தாக்கியபோது அடுத்தநாளே 'அவர்கள் தங்கள் யுத்தநிறுத்த ஒப்பந்த நிலைகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்' என்று கட்டளை போட்ட பன்னாட்டு நடுவர்கள், படையினர் மாவிலாறைக் கைப்பற்றியபோதும் இப்போது சம்பூரைக் கைப்பற்றியதாகச் சொன்னபோதும் ஏன் ஏதும் பேசவில்லை.
புலிகள் மட்டும் புரிந்துணர்வு ஒப்பந்த நடைமுறைக்கு உட்பட்டவர்கள், சிங்களப்படைகள் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துத்தானே அது?

இப்போது சம்பூர் இழப்பை புலிகள் எப்படி அரசியலாக்கிப் போராடப்போகிறார்கள் என்பதே கேள்வி. சம்பூரிலிருந்து படையினர் விலகி பழைய நிலைகளுக்குச் செல்ல வேண்டுமென்று நோர்வேயைக் கொண்டு சொல்லுவிக்க வேண்டும். அனால் சிங்களத்தரப்பு மீள முடியாது. நிச்சயம் எதிர்மறையான பதிலே அரசிடமிருந்து கிடைக்கும். அதைவைத்து நோர்வே அரசதரப்பைக் குற்றம் சொல்லி, நடுவர் பணியிலிருந்து வெளியேற வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும்.
நடக்குமா?

புலிகளின் இராணுவப்பலம் குறைந்துவிட்டதாகக் கருதுபவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். இதைவிட மிகமிகச் சிக்கலான நிலைக்குள்ளிருந்து மீண்ட வரலாறு புலிகளுக்குண்டு. யாழ்ப்பாண இழப்பின் போதாயினும்சரி, ஜெயசிக்குறு உச்சநிலையில் இருந்தபோதான நிலையோடு ஒப்பிட்டாலும் சரி, இப்போதுள்ள நிலைமை இராணுவ ரீதியில் ஒரு பிரச்சினையே இல்லை. பிரச்சினை முழுவதும் அரசியல் ரீதியானதே.

புலிகளை அமுக்க ஏன் எல்லாச் சக்திகளும் ஒன்றாகின்றன, அரச ஒடுக்குமுறையையும் பயங்கரவாதத்தையும் பாராமுகமாக இருக்கின்றன என்பதற்கான பதில் மிகத் தெளிவானது. அது அவர்களே சொல்வது போல் புலிகள் பயங்கரவாதிகள் என்பதன்று. இந்தச் சக்திகளிடமிருந்து ஒருபோதும் நீதியான தீர்ப்பை தமிழர் போராட்டம் பெற முடியாது. உலகப் பயங்கரவாதிகள், புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பவர்களுக்கும் இது தெரியும்.

தற்போதைய நிலையில் படையினரின் மனவுறுதி உயர்ந்துள்ளது. சற்றுமுன் இருந்த நிலையிலிருந்து நிச்சயம் சிங்களப்படையின் உளவுரண் உயர்ந்துள்ளது. இது புலிகள் தொடுக்கப்போகும் பெரிய தாக்குதலின் முற்பகுதியில் விளைவைத் தரும். கடுமையான எதிர்த்தாக்குதல் படையினரிடமிருந்து கிடைக்கும். அந்தநேரத்தில் படையினருக்கு உடையும் உளவுரண்தான் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிக்கு வழிவகுக்கும்.

விரைவில் புலிகள் தரப்பிலிருந்து சரியான பதிலடி கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

August 22, 2006

மாவிலாறு: ஈழப்போராட்டத்தின் தடைநீக்கி

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
நாலரைவருட தளம்பல் காட்சிகளிலிருந்து இப்போது புகார் விலகி உண்மை தெரியத் தொடங்கியுள்ளது.
இதுவரை அந்தப்பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் கேட்டிராத 'மாவிலாறு' என்ற இடத்திலிருந்து ஈழப்பிரச்சினையின் முக்கிய பொறி பற்றத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி அதிகம் பேசத் தேவையில்லை.


தடுக்கப்பட்ட மாவிலாறைத் திறப்பது தொடர்பாக புலிகளுடனும் அப்பகுதி மக்களுடனும் கண்காணிப்புக்குழு பேசிக்கொண்டிருக்கும்போதே, அவ்விடத்தில் அரசவான்படை தாக்குதலை நடத்தியதோடு அந்தப்பிரச்சினைக்கு முழுமையான இராணுவப்பரிமாணம் அரசபடையால் வழக்கப்பட்டது. பின் அணைக்கட்டைக் கைப்பற்றி, தாமே நீரைத் திறப்பதாக அரசு சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது. புலிகள் அணையை பூட்டியே வைத்துவிட்டனர்.

இராணுவ முன்னேற்றத்தை கடுமையாக எதிர்கொண்டு தோற்கடித்தனர் புலிகள். இந்நிலையில், "புலிகள் அணையைத் திறந்தால் நடவடிக்கை நிறுத்தப்படும்" என்று அமைச்சர் அறிவித்தார். இடையறாத தாக்குதலால் பொதுமக்களும் போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில் புலிகள் குறிப்பிட்ட முகாம்கள் மீது தாக்குதலைத் தொடுத்து அவற்றைக் கைப்பற்ற முயன்றனர். அதன் தொடக்கமாக திருகோணமலைத் துறைமுகம் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

புலிகள் துறைமுகம் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தும் வலுவுடன் இருப்பதாக ஓரிரு தடவைகள் பேசப்பட்டபோதும் பெரும்பான்மையானோர் அதை மறுத்தே வந்துள்ளார்கள். எறிகணை செலுத்திகளை வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று சொல்லப்பட்ட, துறைமுகத்துக்கு மிகக்கிட்டிய புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூர், சிறிய கட்டுப்பட்டுப் பிரதேசமாகவும் முழுமையான பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பதே இதற்குக் காரணம். இந்நிலையில் புலிகள் ஆட்லறிகளை அப்பகுதிக்கு நகர்த்துவதற்குத் துணிய மாட்டார்கள் என்பதே எல்லோரினதும் கணிப்பு. ஆனால் அதைமீறி காரியம் நடந்தே விட்டது. துறைமுகம் மீதான முதலாவது தாக்குதலில் 36 எறிகணைகள் வீசப்பட்டன. அனால் மிகத்துல்லியமான எறிகணை வீச்சு.
36 எறிகணைகளில் 6 பேர் கொல்லப்பட 30 பேர் காயமடைவதென்பது (இது அரசதரப்பின் மிகக்குறைந்த சேதச்செய்தி) மிக உச்சப்பெறுபேறு.

அதன்பின் சில நாட்களுக்கு எந்த எறிகணைத் தாக்குதலும் துறைமுகம் மீது நடத்தப்படவில்லையென்பதால் புலிகள் ஆயுதத்தை பழையபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கலாம் என்ற ஊகம் பொதுவாக நிலவியது. ஆனால் சிலநாட்களின்பின் (யாழ்ப்பாணத்தில் களம் திறந்தபோது) மீண்டும் துறைமுகம் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. இம்முறை பெருமளவில் எறிகணைகள் ஏவப்பட்டன. இலக்கும் விரிவடைந்தது. இத்தாக்குதல் மூலம் எல்லோரையும் ஆடிப்போக வைத்துவிட்டார்கள் புலிகள். முதல் தாக்குதலின்போது 800 பேருடன் வந்த கப்பல் திரும்பிச் சென்றுவிட்டது. துறைமுகத்திலிருந்து அனைத்தையும் இடம்மாற்றவேண்டி வந்துவி்ட்டது. யுத்தக் கலங்களை வர்த்தகக் கலங்கள் பாவிக்கும் சீனன்குடாத் துறைமுகத்துக்கு நகர்த்த வேண்டியதாகிவிட்டது. சீனன்குடா துறைமுகம்கூட சூட்டெல்லைக்குள்தான் இருக்கிறது. ஆனால் வர்த்தகக் கப்பல்களோடு இவை இருப்பதால் ஒரு பாதுகாப்பு.

இப்போதும் எந்த நேரமும் துறைமுகம் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்பதுதான் கள யதார்த்தம்.

மறுமுனையில் மாவிலாற்று நடவடிக்கைக்குப் பதிலடியாக புலிகள் தரைவழியால் முன்னேறி சில பகுதிகளைக் கைப்பற்றினர். மூதூர் இறங்குதுறைக்காக இருதரப்பிலும் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. மூன்றுநாள் நடவடிக்கையின்பின் புலிகள் தமது தளம் திரும்பினர்.
சிறிலங்கா அரசு வழமைபோல தனது பக்க இழப்பைக் குறைத்து புலிகளின் இழப்பை அதிகரித்துச் சொன்னது. இரண்டு டோறாக்களை மூழ்கடித்தது உட்பட பல படையினரைக் கொன்றதூடாக புலிகள் இதில் வெற்றி பெற்றார்கள் என்றே கூற வேண்டும். புலிகள் பின்வாங்கியதூடாக, இது புலிகளின் இயலாமையைக் காட்டுகிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால் புலிகள் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் நிலைக்கு அரசியல் ரீதியில் இன்னும் தயாரில்லை. அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துவிட்டதாகக் காட்ட விரும்பவில்லை. புலிகள் மூதூர் நோக்கி முன்னேறியபோது 'சமாதான நடுவர்கள்' புலிகள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் அரச தலைவர்களோ யுத்த வெற்றி பற்றிய மமதையிலிருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. தாமே புலிகளை விரட்டியதாகச் சொன்னார்கள். அத்தோடு மேலும் தீவிரமாக யுத்த நடவடிக்கையைச் செய்தார்கள். இந்நிலையில் நோர்வேத் தரப்பு புலிகளுடன் பேசி மாவிலாறு அணைக்கட்டைத் திறப்பதற்கு இணக்கப்பாடு கண்டார்கள். அதன்படி உடனடியாகவே யுத்தநிறுத்த கண்காணிப்புக்ழுத் தலைவருடன் புலிகள் அணைக்கட்டைத் திறக்கச் சென்றபோது அரசபடை அவர்கள் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியது. அணைக்கட்டு திறக்கப்படக்கூடாதென்பதே அரசவிருப்பமென்பதுபோல் தெரிந்தது.

பின் புலிகள் அணைக்கட்டைத் திறக்கக்கூடாது, தாமே திறக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார் அமைச்சர். நோர்வேத் தரப்பின் கூற்றுப்படி அரசாங்கம்தான் இவ்வணைக்கட்டுப் பிரச்சினையில் அவர்களை சமரச முயற்சிக்குத் அழைத்ததாகத் தெரிகிறது. ஆனால் இறுதியில் தம்மை அவமதித்தது நோர்வேயைச் சினம் கொள்ள வைத்துள்ளது.
அதைவிட ஐந்து நாட்களின் முன்பு அமைச்சர், ' புலிகள் நீரைத் திறந்துவிட்டால் யுத்தம் நிறுத்தப்படும்' என்று அறிவித்த கதை இறுதயில் அவர்களாலேயே கேலிக்கூத்தாக்கப்பட்டது.

யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் உட்பட அணைதிறக்கச் சென்றவர் மீது தாக்குதல் நடத்தியது, நோர்வேயின் அனுசரணை முயற்சியைக் கேலிக்குள்ளாக்கியது, வெளிப்படையாகவே அணைதிறப்பு முயற்சியில் நோர்வேயை அவமதித்துப் பேசியது என்பதுட்பட பல விசயங்கள் நோர்வேக்குச் சினமூட்டியுள்ளது. இந்நிலையிதான் அரசதரப்பின் மீது பகிரங்கமாகவே நோர்வே குற்றம் சாட்டியது. நடக்கும் சண்டை தண்ணீருக்கானதல்ல என்றும் கூறியுள்ளது.

அரசியில் ரீதியில் புலிகளுக்கு இது வெற்றியே. வழமையாக அரசதரப்பு மட்டில் நோர்வேயும் சரி, கண்காணிப்புக்குழுவும் சரி மென்போக்கையே கடைப்பிடித்து வந்தன. இப்போது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டுள்ளார்கள்.
அதைவிட அரசு விடாப்பிடியாக யுத்தம்மூலம் அணைக்கட்டைத் திறப்போம் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அப்பாவி மக்கள் மீது பல்லாயிரக்கணக்கில் எறிகணைகளையும் குண்டுகளையும் வீசிக்கொண்டிருந்த நிலையில், புலிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்து நிலம்வழியாக முன்னேறிக் கொண்டு புலிகளை ஆத்திரமூட்டிக்கொண்டிருந்த நிலையில், புலிகள் மனிதாபிமானமாக நீரைத் திறந்துவிட்டுள்ளனர். இதுவும் அரசியல் ரீதியில் புலிகளுக்குச் சாதகமே.

இந்தச் சமாதானப் பொறிக்குள்ளிருந்து எப்படி வெளியேறுவது என்று தள்ளாடிக்கொண்டிருந்த புலிகளுக்கு உலகமே சாதகமான முறையில் படிப்படியாக வழியொன்றைக் காட்டியுள்ளது. அந்த வழியை சிறிலங்கா அரசு மேலும் இலகுவாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தடைமுதல் மாவிலாறு மீதான யுத்தம்வரை நடந்தவை அவைதாம்.

மாவிலாறு முனையில் புலிகளுக்குச் சாதகமாக இன்னொரு சம்பவம் நடந்தது. மாவிலாறு அணைக்கட்டைப் படையினர் கைப்பற்றிக் கொண்டதுதான் அது. அதாவது யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் போதான நிலையிலிருந்து முன்னேறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை சிறிலங்காப்படையினர் கைப்பற்றி தொடர்ந்து தக்கவைத்துள்ளனர். இங்கே, புலிகள் இயலாமையால் அவ்விடத்தை இழந்தார்களா அல்லது வேண்டுமென்றே தந்திரமாகப் பின்வாங்கினார்களா என்ற கேள்வி வருகிறது. ஆனால் படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றைக் கைப்பற்றினார்கள் என்பதே முக்கிய அவதானம்.
இதுவே இன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட களத்துக்கும், யாழ்ப்பாணத்தில் புலிகளைப் பின்வாங்கச் சொல்லி 'சமாதான நடுவர்களால்' அறிவுறுத்த முடியாமல் இருப்பதற்கும் மூலகாரணம்.

இன்று மாவிலாறிலிருந்து சிங்களப்படையால் பின்வாங்க முடியாது. அந்தளவுக்கு அவர்கள் அதைப் பெரிய அரசியலாக்கிக் குளிர்காய்ந்தார்கள். என்னவிலை கொடுத்தும் மாவிலாறைத் தக்கவைக்கவேண்டுமென்ற நிலைக்குச் சிங்கள ஆழும்வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. இது அவர்களாகவே தேடிக்கொண்டது. இந்த நிலைதான் தமிழர் தரப்புக்குச் சாதகமானது. சமாதானப் பொறியிலிருந்து முழுவதுமாக விடுபட தமிழர்க்கு இருக்கும் துருப்புச்சீட்டுத்தான் இந்த மாவிலாறு. தொடரப்போகும் நிகழ்வுகளுக்கு அச்சாரம் போட்டதும் இந்த மாவிலாறுதான். இன்று யாழ்ப்பாணத்தில் தொடங்கிய களமுனைக்கும் 'மூலம்' இதே மாவிலாறுதான்.

அதனாற்றான் சொல்கிறோம்,
மாவிலாறு: ஈழப்போராட்டத்தின் தடைநீக்கி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதைப் பிறகு பார்ப்போம்.

August 09, 2006

புலிகளின் புதிய வளர்ச்சி.

விடுதலைப் புலிகள் "பீரங்கி ஒருங்கிணைப்பாளர் பயிற்சிநெறி" என்ற பெயரில் முதுநிலை அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியை நிறைவு செய்துள்ளனர்.

புலிகளின் பீரங்கிப் படையணியின் வளர்ச்சி அபரிதமானது. முல்லைத்தீவுப் படைமுகாம் 1996 இல் வெற்றி கொள்ளப்பட்ட பின் அவர்கள் பீரங்கித் தாக்குதலில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார்கள். இரண்டு ஆட்லறிகளுடனும் எண்ணிக்கையில் மோட்டார்களுடனும் அவர்களின் வளர்சசி தொடங்கியது. சத்ஜெய நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பயிற்சிக் களம்.
ஜெயசிக்குறு தொடங்க முன் வவுனியாவில் ஆட்லறியால் மட்டும் ஒரு செறிவான தாக்குதலை நடத்தி எதிர்பார்த்ததை விட பெரிய பெறுபேற்றைப் பெற்றார்கள்.
பின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அரசபடையால் தொடங்கப்பட்ட பின் புலிகளின் மோட்டார்ப் படையணி விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையில் மட்டக்களப்பு புளுகுணாவ இராணுவ முகாமல் கைப்பற்றப்பட்ட ஒரு ஆட்லறியும் புலிகளுக்குப் பலம் சேர்த்த்து.

ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைதான் புலிகளின் எறிகணை வீச்சுப் பலத்தைப் பெருக்கியது. அவர்களின் திறமையை வளர்த்த்து. துல்லியத் தன்மையை நன்கு வளர்த்துக்கொண்டார்கள். ஜெயசிக்குறு என்று மட்டும் நின்றுகொள்ளாது பல்வேறு பெயர்களில் வன்னி முழுவதும் போர் விரிவு படுத்தப்பட்போது புலிகளின் எறிகணைவீச்சுக் களமும் நன்கு விரிவுபடுத்தப்பட்டது. எல்லா முனையிலும் சண்டையை எதிர்கொள்ளும் வலுவோடு மிகத்திறமையாக பீரங்கிப் படையணி வளர்ச்சி பெற்றது.

பின்வந்த மிகப்பெரிய வலிந்த தாக்குதல்களில் புலிகள் என்றுமில்லாதவாறு பீரங்கிப் படையணியைப் பயன்படுத்தினர். ஓயாத அலைகள் -2 இல் கிளிநொச்சியை மீட்டதில் கணிசமான பங்கை ஆற்றியது பீரங்கிப்படையணி. அதேநேரம் எதிரிகளின் கட்டளை மையங்கள், ஆட்லறி நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு புலிகளின் ஆட்லறிப்படையணியும் வளர்ச்சி பெற்றது. பல தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்கிடையில் பல்குழல் ஆட்லறியையும் புலிகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதன்மூலம் தனியே சிங்களப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை மட்டும் புலிகள் வைத்திருக்கவில்லை என்ற செய்தி வெளிவந்தது.

ஒரு வருட முழுமையான தயார்ப்படுத்தல்களின் பின் ஓயாத அலைகள்-3 தொடங்கிய போது புலிகளின் பீரங்கிப்படையணியின் வளர்ச்சி மிகப்பெரிய பாய்ச்சலாக இருந்தது. அந்த நடவடிக்கையில் முழுப்பங்குமே பீரங்கிப்படையணிதான் என்றளவில் ஓயாதஅலைகள் -3 இன் தொடக்கத் தாக்குதல்கள் அமைந்தன. மிகக்குறைந்த மனித இழப்புக்களோடு வன்னியின் பெருநிலப்பரப்பை மீட்டனர் புலிகள். புலிகளின் துல்லியமான அதேநேரம் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்கள் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

பின் வந்த ஆனையிறவு மீதான சுற்றிவளைப்புத் தாக்குதலுட்பட அனைத்திலுமே பீரங்கிப்படையணி முக்கிய பங்காற்றியது. பரந்தனில் பட்டப்பகலில் எதிரிக்குச் சொல்லிவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முழுவதும் பீரங்கிப்படையணியிலேயே தங்கியிருந்தது. இதேவேளை அவ்வப்போது பலாலி மீதும் காங்கேசன்துறை மீதும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி கலங்கடித்தனர் புலிகள். யாழ்ப்பாணச் சமரிலும் பீரங்கித் தாக்குதலைத் தாராளமாகப் பயன்படுத்தினர்.

ஆனையிறவில் மேலும் சில ஆட்லறிகள் புலிகளுக்குக் கிடைத்தன. எதிரிகளுக்கு புலிகளின் பீரங்கிப்பலம் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது.

குறிப்பிடக் கூடிய இறுதிச்சண்டையான "தீச்சுவாலை" முறியடிப்புச் சமரில் புலிகளின் பீரங்கிப்பலத்தை உலகமே வியந்தது. அந்த மூன்று நாட்சண்டைகளிலும் புலிகள் பயன்படுத்திய எறிகணைகளின் எண்ணிக்கையும் அவற்றின் துல்லியத்தன்மையும் அனைவரையும் திகைக்கச் செய்தது.

பீரங்கிப் படையணியின் இவ்வெற்றிகளுக்கு பல துணைக்காரணிகளும் முக்கியமானவை.
முன்னணி அவதானிப்பாளர் என்று சிலர் செயற்படுவார்கள். பீரங்கிச் சூட்டின் வழுக்களைக் கவனித்துத் தெரிவிக்க வேண்டும். இவற்றைச் சரியான முறையில் சம்பந்தப்பட்ட பீரங்கிகளுக்கு அறிவித்து வழுக்களைத் திருத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒருங்கிணைப்பு சரியாக இருக்க வேண்டும். பல பீரங்கிகளை வைத்துத் தாக்குதல் நடத்தும்போது ஏற்படும் தகவற்பரிமாற்றச் சிக்கல்களைச் சரியாகக் கையாள வேண்டும். ஒருங்கிணைப்புத் தவறுகளால் இலக்குச் சரியாகத் தாக்கப்படாமற் போகவும், எறிகணைகளின் வீணாகப் போவதற்கும், சில சமயங்களில் சொந்தப் படையே தாக்குதலுக்குள்ளாகவும் வாய்ப்புண்டு.

இக்கட்டினமாக பணியை அனைவரும் செய்திட முடியாது. ஏற்கனவே புலிகளில் இப்படியான ஒருங்கிணைப்பாளர்கள் திறமையாகவே செயற்பட்டிருக்கிறார்கள். தேவைக்கு ஏற்றாற்போல் ஒருங்கிணைப்பாளர்களைக் கையாண்டிருக்கிறார்கள்.

எனினும் இப்போது முறைப்படி பயிற்சி நெறியொன்றை இரு அணிகளுக்கு முழுமையாக அளித்து நிறைவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் தகுதியான ஒருங்கிணைப்பாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார்கள் என்பதோடு இன்னும் உருவாக்கப் போகிறார்கள் என்பதும் உண்மை. கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் இனிமேல் வராமலிருப்பதை உறுதி செய்கிறார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் குறிப்பிட்ட பணிக்கு ஆட்பற்றாக்குறை வராமல் இருப்பதையும் உறுதி செய்கிறார்கள்.

பீரங்கிச்சூட்டு ஒருங்கிணைப்புப் பயற்சியை ஒரு நெறியாகவே நடத்தி முடிக்கிறார்கள் என்ற அளவில் புலிகளின் பீரங்கிப் படையணியும் ஆயுத, ஆட்பலத்தில் பெருகியுள்ளது என்பதையே இது காட்டுக்கிறது.

July 17, 2006

சிங்கள அரசின் படுதோல்வியான தாக்குதல்

இரு தினங்களின் முன் மட்டக்களப்பில் பெரிய சண்டையொன்று நடந்து முடிந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாகனேரி-குளத்துமடு என்ற பகுதியில் நடந்ததே இச்சண்டை.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் சிறிலங்காப் படையினருக்கம் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற பெரிய நேரடிச் சண்டையாக இதைச் சொல்லலாம். நடந்தது என்ன?

புலிகளின் தரப்புக் கூற்றுப்படி,
பெருமளவான படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி வாகனேரி-குளத்துமடுப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் நிலையொன்றை (அனேகமாக சிறிய முகாமாகவோ வீடாகவோ இருக்கலாம்) தாக்கியுள்ளனர். இதில் அங்கிருந்த நான்கு விடுதலைப்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு படையினர் அங்கேயே தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் பலர் தாமாகவே அவ்விடத்தைவிட்டு இடம்பெயர்ந்தனர். பின் புலிகள் இடம்பெயரச் சொல்லி அறிவித்தபின் மிகுதியானவர்களும் இடம்பெயர்ந்தனர்.

இராணுவத்தினர் ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தியதாகவும் தொடர்ந்தும் தமது பகுதிக்குள் இராணுவம் நிலையெடுத்திருப்பதாகவும் அவர்களை உடனடியாக திரும்பிச் செல்லப் பணிக்கும்படியும் விடுதலைப்புலிகள் கண்காணிப்புக் குழு ஊடாக அறிவித்திருந்தனர். இரண்டு மணித்தியாலத்தின்பின், கண்காணிப்புக்குழு பதில் சொல்லியுள்ளது. அதில் இராணுவத்தரப்பு அப்படியான ஊடுருவலை மறுப்பதாகவும், தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்தான் தேடுதல் ஒன்று நடைபெறுவதாகவும் தமக்குச் சொல்லியிருப்பதாகவும் கண்காணிப்புக்குழு பதிலளித்தது.

இதைத்தொடர்ந்து முன்னேறி வந்து நின்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாகக் கூறுகிறது புலிகள் தரப்பு.

பிரச்சினை நடந்துகொண்டிருந்தபோது, அரசகட்டுப்பாட்டுப் பகுதியில்தான் தேடுதல் நடத்தச் சென்ற இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக இராணுவத்தரப்புச் சொல்லியது. அதைவிட புலிகளின் எறிகணைத் தாக்குதலில்தான் படையினர் பாதிக்கப்பட்டதாகவும் இராணுவத் தரப்பை மேற்கோளிட்டு சில செய்திகளும் வந்தன.

நடந்த மோதல் கடுமையானதாகவே தெரிகிறது. புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 12 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஒரு இராணுவ கோப்ரல் உயிருடன் புலிகளால் பிடிக்கப்பட்டார். புலிகள் 12 இராணுவத்தினரது உடல்களைக் கைப்பற்றினார்கள். இராணுவத்தினரின் இழப்பு விவரம் புலிகளால் அறிவிக்கப்பட்ட பின் இராணுவப் பேச்சாளர் அதை மறுத்து பன்னாட்டுச் செய்தி நிறுவனத்துக்குச் சொல்லியுள்ளார். மேலும் சம்பவ இடம் படையினரது கட்டுப்பாட்டுப் பகுதியே என்று திரும்பவும் சொல்லியுள்ளார்.

ஆனால் தம்மால் கைப்பற்றப்பட்ட பன்னிரண்டு சடலங்களையும் புலிகள் கையளித்த போது அரசாங்கம் பெற்றுக் கொண்டது. (முன்பு தனது படையினரின் சடலங்களைப் பெற்றுக் கொள்ளாமல் கைகழுவி விட்ட அரசு இப்போது சடலங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்குப் பக்குவப்பட்டுள்ளது போல் தெரிகிறது. எனினும் சடல எண்ணிக்கை அதிகரிக்கும்போது எப்படி நடந்துகொள்ளுமென்று தெரியவில்லை)
இதன்மூலம் தாக்குதல் நடத்தியது படைத்தரப்புத்தான் என்பதையும் இழப்பு விவரங்களையும் அரசு ஒத்துக் கொண்டது.

அடுத்த விடயம், தாக்குதல் நடந்த இடம் தொடர்பானது. இரு தரப்பும் அது தமக்குரிய இடமென்று சொல்லியுள்ளன. ஆனால் புலிகள் சடலங்களைக் கைப்பற்றியதும், ஒருவரை உயிருடன் பிடித்ததும், சண்டை நடந்த இடத்தைக் கண்காணிப்புக் குழுவுக்குக் காட்டியதும் ஒருதரப்புச் செய்தியை உண்மையாக்குகின்றன. அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்பதே அது. அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்ததும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான இன்னொரு கிராமத்துக்கு, சண்டை நடந்த இடத்தில் புலிகள் கூடிநின்று புகைப்படங்கள் பிடித்ததும் கண்காணிப்புக்குழுவை அங்கு அழைத்துவந்து காட்டியதும் அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிதான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கண்காணிப்புக்குழுவுக்கும் உண்மை தெரிந்துள்ளது.

அதைவிட கைதுசெய்யப்பட்ட இராணுவக் கோப்ரல் மேலும் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். ஒரு கப்டனின் தலைமையில் தாக்குதலுக்காக ஊடுருவியதாக அவர் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுவித் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. எல்லாச் சந்தர்ப்பத்திலும் அவை கருணா குழுவின் வேலை என்றே அரசு சொல்லி வந்தது. கருணா குழுவென்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்களும் உரிமைகோரி அறிக்கை விட்டுக் கொண்டிருப்பர். (இது எல்லாளன்படை, சங்கிலியன் படை போன்றவையென்று எல்லோருக்கும் தெரியும்)
ஆனால் முதன்முதலில் அரசு புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் மேற்கொண்டதை ஒத்துக்கொண்ட சம்பவம் நடந்தது வன்னியில்.
ஊடுருவிய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒருவர் புலிகளின் துணைப்படை மூலமும் இன்னொருவர் ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் மூலமும் கொல்ல்பபட்டனர். அவர்கள் இருவரினதும் சடலங்களும் கைப்பற்றப்பட்டன. (அதன்பிறகு வன்னியில் படையினரின் தாக்குதல் நிறுத்தப்பட்டது. மன்னாரில் மட்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது)

அந்தச் சடலங்களை அரசாங்கம் பொறுப்பெடுத்தது. அதன்மூலம் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது அரசபடைதான் என்பதை அரசே ஒத்துக் கொண்டது. ஆனால் புலிகள் அதை ஏன் பெரிய அளவில் பிரச்சினையாக்கவில்லை என்பது கேள்விக்குறிதான்.

இப்போது மட்டக்களப்பில் நடந்தது இந்த விசயத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. புலிகளின் தாக்குதலில் சடலங்களேதும் கைப்பற்றப்படாமல் அரசபடை வெற்றிகரமாக தளம் திருப்பியிருந்தால் வழமைபோல கருணா குழு உரிமைகோரி அறிக்கை விட்டிருக்கும்; அரச தரப்பும் கருணா குழுதான் செய்தது, தமக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று மறுப்பறிக்கை விட்டிருக்கும்.
ஆனால் இந்தமுறை முகத்திற் கரியைப் பூசிக்கொண்டது அரசு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வளவு காலமும் நடந்த ஊடுருவல் தாக்குதல்கிளில் இருந்து இது வேறுபட்டுள்ளது. வழமையாக மிகச்சிறிய அணியாக வந்து தாக்குதல் நடத்தப்படும். தாக்கதல் நடத்தியதும் அவ்வணி வெற்றிகரமாக தமது தளத்துக்குத் திரும்பிவிடும்.
ஆனால் இம்முறை வந்ததோ மிகப்பெரிய அணி. தாக்குதல் நடத்திய புலிகளின் கணிப்பில் 75 வரையான படையினரென்றும், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் தகவலின்படி 150 வரையான படையினரென்றும் கணக்குக் காட்டப்படுகிறது.

எது எப்படியாயினும் குறைந்தது 50பேர் கொண்ட பெரியதொரு அணியாவது வந்திருக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட சடலங்கள் மட்டுமே 12. ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார். அதைவிட நிறையப்பேர் காயத்துடன் தளம் திரும்பியுள்ளனர். அவர்களை அப்பகுதியிலிருந்து அகற்ற புலிகளுக்கு இரு மணிநேரம் எடுத்துள்ளது. இதைவிட இன்னொரு விசயமும் கவனிக்கப்பட வேண்டும்.
வந்த படையினர் தாக்குதல் நடத்திவிட்டு தளம் திரும்பவில்லை. மாறாக அப்பகுதியிலேயே நிலையெடுத்துத் தங்கியுள்ளனர்.
புலிகளின் எதிர்த்தாக்குதலையும் எதிர்பார்த்தே நிலையெடுத்துள்ளனர். அதற்கேற்றாற்போல்தான் பெருமளவு இராணுவத்தினர் முன்னேஉறி வந்துள்ளனர்.

இங்கே முக்கியமான கேள்வி எழுகிறது. படையினரின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்? அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே நோக்கமா? அப்படியானால் முழு அளவிலான போரைத் தொடங்கிவிட்டார்களா?
அல்லது புலிகளுக்கு மேலும் இழப்பை ஏற்படுத்த வேண்டுமென்று காத்திருந்தார்களா? பெரியதொரு இலக்கோடு வந்து வெறும் நான்கு போராளிகளை மட்டும் கொன்றது ஏமாற்றமாயிருந்ததால் மேலும் ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் ஒன்று தெளிவானது. புலிகளின் முறியடிப்பு மிகப்பலாமான எதிரியுடன் நடத்தப்பட்டிருக்கிறது. நிலையெடுத்திருந்த எதிரியுடன் கடுமையாகவே சண்டை பிடித்துள்ளனர்ட. அவ்விராணுவத்தினருக்கு ஆதரவாக படைமுகாம்களில் இருந்து எறிகணைவீச்சு மூலம் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் புலிகள் வென்றுவிட்டார்கள். அதுவும் மிகக்குறைந்த இழப்புடன் படையினரைத் துரத்தியுள்ளார்கள்.
முறியடிப்பு மோதலில் புலிகள் தரப்பில் எவ்வித உயிர்ச் சேதமுமில்லை. மூன்றுபேர் மட்டும் காயமடைந்ததாகப் புலிகள் அறிவித்துள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கண்காணிப்புக்குழுவினரை வெளியேறச் சொல்லி புலிகள் காலக்கெடுவும் விதித்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உலகமும் கண்காணிப்புக்குழுவும் உள்ள நிலையில், இதுதொடர்பில் புலிகள் மீது விசனப்பட்டு காட்டமான ஒரு செவ்வியைக் கண்காணிப்புக்குழுத் தலைவர் (இவரும் வெளியேற வேண்டிய பட்டியலில் உள்ளவர்) கொழும்பில் அளித்த நிலையில், படையினரின் இப்பெரிய அத்துமீறலும் புலிகளின் பலமான பதிலடியும் நிகழ்ந்துள்ளது.

இது இலங்கை நிலவரத்தில் பெரிய திருப்புமுனையாக அமையுமெனலாம். ஊடுருவல் தாக்குதல்களை தமது படையினர் தான் செய்கின்றனர் என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளும் நிலைக்குச் சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. யுத்த மேகங்களும் இலங்கையில் தெளிவாகவே தெரிகின்றன.